தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை கடந்த திங்கட்கிழமை கவலைக்கிடமாக மாறியதுமே பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர்.
மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை அவர் உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் வெளி மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் சென்னைக்கு வரத் தொடங்கினார்கள். அன்று மாலை 6 மணிக்கு கருணாநிதி மரணம் அடைந்த தகவல் பரவியதும் மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.
அன்றிரவு கருணாநிதி உடலை வீட்டுக்கு கொண்டு செல்லவே 1½ மணி நேர பயணத்தை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. அதற்கு காரணமே வெள்ளம் போல திரண்டு விட்ட தி.மு.க. தொண்டர்கள்தான். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் “வீர வணக்கம், வீர வணக்கம்... கலைஞருக்கு வீர வணக்கம்” என்று முழங்கியபடி சென்றது உணர்ச்சிமயமாக இருந்தது.
மதியம் பொதுமக்கள் வருகை கணிசமாக அதிகரித்தது. கருணாநிதி இறுதி ஊர்வலம் வாலாஜா சாலை வழியாக வரும் என்பது தெரிய வந்ததும் லட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியே குலுங்கியது.
பிற்பகலிலும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மக்கள் அலை, அலையாக வந்தபடி இருந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த போலீசார் கடும் சவாலை சந்தித்தனர். இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் முண்டியடித்ததால் நெரிசல் உருவானது.
இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு அமைதி ஏற்படுத்தப்பட்டது.
கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டு இரவு 7.30 மணிக்குப் பிறகு தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கலைந்து செல்லத் தொடங்கினார்கள். தொண்டர்கள் முழுமையாக கலைந்து செல்ல சுமார் 5 மணி நேரம் ஆனது.
லட்சக்கணக்கான மக்கள் வருகையால் கருணாநிதி இறுதி ஊர்வலம் மறக்க முடியாத ஊர்வலமாக மாறியது. இந்த இறுதி ஊர்வலத்தில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றதாக போலீஸ் தரப்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் சுமார் 5 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக தி.மு.க. வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral