சென்னை:
தமிழகத்தில் ‘ஏர்செல்’ தனியார் தகவல் தொடர்பு நிறுவனத்தின் சேவை முடங்கியதால் பொதுமக்கள் கடுமைமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 3-வது நாளாக நீடித்து வரும் இந்த பிரச்சினையால் தகவல் இணைப்பு பெற முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
கார், ஆட்டோ பயணத்திற்கு மொபைல் ஆப் மூலம் பதிவு செய்தல், சினிமா மறறும் ஓட்டல்களில் உணவிற்கு புக் செய்தல், இது தவிர தொழில் ரீதியாக பரிமாற்றங்களை செய்யக் கூடியவர்கள் ஏர்செல் சேவை முடங்கியதால் தவித்து வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் நெட்ஒர்க் பிரச்சினை ஏற்பட்டதால் தகவல் பரிமாற்றங்கள் இல்லாமல் ஸ்தம்பித்து போனார்கள்.
இன்றைய காலக் கட்டத்தில் மொபைல் போன் தொடர்பு இல்லாமல் ஒரு சில நிமிடங்கள் கூட இருக்க முடியாத பட்சத்தில் 3 நாட்களாக சேவை அடியோடு பாதிக்கப்பட்டு இருப்பதால் வாடிக்கையாளர்கள் ஏர்செல் அலுவலகங்களை முற்றுகையிட்டு வருகிறார்கள்.
சென்னையில் பல்வேறு இடங்களில் ஏர்செல் டீலர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென சேவையை துண்டித்து இருப்பதால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் ஏர்செல் அலுவலகங்களில் திரண்டு மாற்று ஏற்பாடு செய்யும்படி வலியுறுத்துகின்றனர்.
ஏர்செல் நெட்ஒர்க்கில் இருந்து பிற நெட்ஒர்க்கிற்கு மாறும் ‘போர்ட் அவுட்’ முறை செயல் இழந்துள்ளது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்கள் போர்ட் அவுட் முறையை பயன்படுத்த முயற்சிப்பதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பல தரப்பட்ட தொழில் செய்வோர் இருப்பதால் லட்சக் கணக்கான செல்போன் இணைப்புகள் உள்ள நிலையில் ஏர்செல் பயன்படுத் தக்கூடியவர்கள் வேறு நெட் ஒர்க்கிற்கு மாற முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.
புதிதாக வேறு நிறுவன மொபைல் எண் வாங்கினால் கூட செயல் இழந்து கிடக்கும் ஏர்செல் போனில் இருந்த எண்களை மீண்டும் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
வர்த்தக தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், வியாபாரிகள் என பல தரப்பட்டவர்களும் ஏர்செல் முடங்கியதால் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள், தொழில் சார்ந்தவர்களின் எண்களை மீண்டும் பெற முடியாமல் திண்டாடுகின்றனர்.
சென்னையில் ஏர்செல் நிறுவன வினியோகஸ்தர்கள் கடை முன்பு கூட்டம் தினமும் அதிகளவு கூடுவதால் அங்கு மற்ற நிறுவனங்களின் செல்போன் எண்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதனை உடனே வாங்கி பயன்படுத்துகின்றனர். tamilnews #Aircelserviceimpact #tamilnadu #customers