செய்திகள்

தாத்தா பணம் கொடுக்காததால் நகை கடையில் கொள்ளையடித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

சுற்றுலா செல்ல தாத்தா பணம் கொடுக்காததால் நகை கடையில் கொள்ளையடித்த கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

திருப்பதி:

சித்தூர் மாவட்டம் பலமநேரை சேர்ந்தவர் நியானசந்த் ஜெயின். இவர் பலமநேர் லிங்காயத் ரோட்டில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவருடைய பேரன் பிரதீப் ஜெயின் (21). இவர் பலமநேரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய பெற்றோர் இறந்து விட்டதால் தாத்தாவின் வீட்டில் தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் கோவா, கேரளா சுற்றுலா செல்ல வேண்டும் என தன்னுடைய தாத்தாவிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரதீப் தன்னுடைய நண்பர்கள் 6 பேருடன் நகைகளை திருட திட்டம் தீட்டினார். நேற்று மதிய உணவு இடைவேளையின்போது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு நியானசந்த் சென்றார்.

இதை நோட்டமிட்டட பிரதீப் மற்றும் அவரது நண்பர்கள் கடையை திறந்து பீரோவில் இருந்த 1 கிலோ 240 கிராம் தங்க நகைகளை எடுத்து கொண்டு மீண்டும் கடையை பூட்டிவிட்டு தப்பி சென்றனர்.

உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் கடையை திறந்து பார்த்தபோது பீரோவில் இறந்த நகைகள் மாயமானதை கண்ட நியானசந்த் ஜெயின் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்து ஈதுருபாஷா, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் கடையில் வேலை செய்யும் ஊழியரிடம் விசாரணை நடத்தினர்.

அதன்பின் பிரதீப் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்ததால் அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது பலமநேர் பஸ் நிலையத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து பஸ் நிலையத்தில் இருந்த பிரதீப்பை பிடித்து சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த பையில் நகைகள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவருடன் இருந்த புரந்தர் ரெட்டி (21), பிரதிவ்ராஜ் (20) உள்பட 3 பேரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள கல்யாண் (20), குணசேகர் (20), யஸ்வந்த் (20) ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுற்றுலா செல்ல தாத்தா பணம் கொடுக்காததால் நகைகளை திருடி வெளியே விற்று சுற்றுலா செல்ல இருந்ததாக தெரிவித்தனர். #tamilnews