வீராணம் ஏரி நிரம்பி இருக்கும் காட்சி. 
செய்திகள்

நீர் வரத்து குறைந்தது- வீராணம் ஏரியில் இருந்து 2,900 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

காட்டுமன்னார்கோவில் அருகே நீர் வரத்து குறைந்ததால் வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் இன்று காலை 2,900 கன அடியாக குறைந்தது.

மாலை மலர்

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50அடியாகும். இந்த ஏரியின் மூலம் ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களின் குடிநீருக்காவும் இந்த ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பபடுகிறது. 

காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வடவாற்றில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் மழைநீருடன் சேர்ந்து ஏரிக்கு நீர் வரத்து 3100 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் நேற்று  46.60 அடியாக  உயர்ந்தது. பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து  700 கன அடி நீர்  வெளியேற்றப்பட்டது. இதனால் ஏரியை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் வயல் வெளிகளில் தண்ணீர் புகுந்தது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

இந்த நிலையில் காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து மழை பெய்யவில்லை. வடவாற்றில் இருந்து வீராணம் ஏரிக்கு வரும் நீர்வரத்து இன்று காலை 2,900 கன அடியாக குறைந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டமும் 45. 95 அடியாக குறைந்தது. இதை தொடர்ந்து ஏரியில் இருந்து வெளியேற்றபடும் தண்ணீரும் 2,900 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீருக்காக ஏரியில் இருந்து வினாடிக்கு 73 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.  

காட்டுமன்னார் கோவில் பகுதியில் நேற்று மழை பெய்யாததாலும், ஏரியில் இருந்து வெளியேற்றபடும் தண்ணீரின் அளவும் குறைக்கபட்டுள்ளதால் அந்த பகுதியில் தேங்கி இருந்த மழை நீர் வடிய தொடங்கியுள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. அதை அப்புறபடுத்தும் பணியில் அந்த பகுதி பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.