கோப்பு படம் 
செய்திகள்

சிரியாவில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் ஈராக் போராளிகள் 26 பேர் பலி

சிரியாவில் கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈராக் ஆதரவு போராளிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

மாலை மலர்

டமாஸ்கஸ்:

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்துவரும் இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற ரஷியா தலைமையிலான அரசு படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. 

கிளர்ச்சியாளர் குழுக்களுக்கு அண்டை நாடான துருக்கி ஆதரவு அளித்துவருவது மட்டுமல்லாமல் சிரியாவின் எல்லைக்குள் ஆயுதங்கள் உள்பட ராணுவ தளவாடங்களை குவித்துவைத்துள்ளது. 

ஆனால், இட்லிப் விவகாரத்தில் ரஷியா-துருக்கி இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான தாக்குதல்கள் எதுவும் அரங்கேறவில்லை.

இதற்கிடையில், ஈராக் ஆதரவு பெற்ற ஹஷத் ஷாபி என்ற போராளிகள் குழுவும் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் பதுங்கி இருந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் சிரியாவில் சண்டையிட்டுவரும் நிலையில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளும் தங்கள் பங்கிற்கு அவ்வப்போது வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகின்றனர். 

இந்த தாக்குதல்களில் பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்கள், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துவருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் டிய்ர் அல்-ஷோர் மாகாணம் அல-புகமல் நகரில் செயல்பட்டுவந்த ஈராக் ஆதரவு பெற்ற ஹஷத் ஷாபி போராளிகள் குழுக்களை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஈராக் ஆதரவு போராளிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.