செய்திகள்

காஷ்மீர் இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வம்- 111 இடங்களுக்கு 2,500 பேர் திரண்டனர்

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவத்தில் காலியாக உள்ள 111 பணியிடங்களுக்கு 2,500 இளைஞர்கள் விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்றனர். #PulwamaAttack

மாலை மலர்

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதியின் தற்கொலைப்படை தாக்குதலில் 40 மத்தியப்படை வீரர்கள் பலியானார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. ராணுவம் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் ராணுவத்தை பலப்படுத்துவதற்காக காலி இடங்களை நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவத்தில் காலியாக உள்ள 111 பணியிடங்களுக்கு வீரர்களை தேர்வு செய்யும் பணி நேற்று நடந்தது.

இதற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதையடுத்து ராணுவத்தில் சேர நேற்று காஷ்மீர் இளைஞர்கள் பெருமளவில் திரண்டனர். மொத்தம் உள்ள 111 இடங்களுக்கு 2,500 இளைஞர்கள் திரண்டனர். அவர்களுக்கு பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு இறுதியாக அவர்களில் இருந்து 111 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மேலும் சில இளைஞர்கள் கூறுகையில், நாங்கள் வேலைக்காக காஷ்மீரை விட்டு செல்ல மாட்டோம். ராணுவத்தில் வேலை என்பது மிகப்பெரிய வாய்ப்பு. காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்களை வேலைக்கு சேர்த்து உள்ளூரில் பிரச்சனைக்குரிய இடங்களில் பணி நியமனம் செய்தால், அவர்களால் மக்களுடன் எளிதில் அணுகி பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று தெரிவித்தனர்.

ஜம்மு- காஷ்மீரில் மொத்தம் 22 மாவட்டங்கள் உள்ளன. இதில் ஸ்ரீநகர், அனந்தநாக், பாரமுல்லா, குல்காம், புல்வாமா ஆகிய 5 மாவட்டங்கள் மட்டுமே பயங்கரவாதிகளால் பாதிக்கப்படுகிறது.