செய்திகள்

கிரிக்கெட் விளையாடும்போது தலையில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு

ஐதராபாத்தில் கிரிக்கெட் விளையாடும் போது காயமடைந்த இளம் வீரர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

ஐதாராபாத்:

ஐதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிர் ஆலம் இத்கா என்ற உள்ளூர் மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினர். ஒரே மைதானத்தில் பல குழுக்களாக இளைஞர்கள் விளையாடியதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு குழுவில் இடம்பெற்றிருந்த வாஜித் என்ற இளைஞர், எதிரணி வீரர் அடித்த பந்தை கேட்ச் பிடிப்பதற்காக ஓடிச்சென்றிருக்கிறார். அப்போது மைதானத்தில் விளையாடிய மற்றொரு அணியின் வீரர் மட்டை இவரது தலையில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் நிலைகுலைந்த அந்த வாஜித் அப்படியே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு உடனடியாக சக இளைஞர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அவரது சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பகதூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.