திருப்பூர்:
திருப்பூர் தென்னம் பாளையத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தூத்துக்குடி, கன்னியாகுமரி, கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இங்கிருந்து வாங்கி சென்று திருப்பூரின் பல்வேறு இடங்களில் சில்லரை வியாபாரம் செய்தும் வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து தமிழக மீன் வளத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை திருப்பூர் தென்னம்பாளையம் உள்ள மீன் மார்க்கெட்டில் தமிழக மீன் வளத்துறை அதிகாரி சுப்பிரமணியம் தலைமையிலான அதிகாரிகளும் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகளும் திடீரென சோதனை செய்தனர்.
அப்போது அங்கு வெளிமாநிலங் களில் இருந்து கொண்டுவரப்பட்டு லாரியில் வைக்கப்பட்டிருந்த மீன்களை ஆய்வு செய்தனர். மேலும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த மீன்களையும் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா? கெட்டுப்போன மீன்கள் விற்கப்படு கிறதா? எனவும் ஆய்வு செய்தனர். அப்போது கெட்டுபோன 20 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கடைக்காரர்களிடம், மொத்த வியாபாரிகளிடமும் அதிகாரிகள் கூறுகையில் பொதுமக்களுக்கு கெட்டுப்போன மற்றும் ரசாயனம் கலந்த மீன்களை விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.