திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களும் துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனையும் மீறி அத்தியாவசிய தேவைகளுக்கு இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருகிறவர்களை போலீசார் எச்சரித்து வருகிறார்கள். அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறுகிறவர்களுக்கு போலீசார் நூதன தண்டனையும் வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள சந்திப்பு பகுதியில் நேற்று காலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவைகளுக்காக இல்லாமல் வெளியே வந்த வாகன ஓட்டிகள் 200 பேரை பிடித்து காலணிகளை கழற்ற வைத்து வெறும் காலில் அந்த பகுதியில் உள்ள சாலை தடுப்பு சுவரில் ஏறி நிற்க வைத்தனர்.