கோப்புபடம் 
செய்திகள்

அருப்புக்கோட்டையில் நாய்கள் கடித்து 20 பேர் படுகாயம்

அருப்புக்கோட்டையில் நாய்கள் கடித்து 20 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாலை மலர்

அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் உச்சிசாமி கோவில் தெரு பகுதியில் கடந்த சில வாரங்களாக நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது.

இந்த நாய்கள் அந்த வழியாக செல்பவர்களை விரட்டி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற 20-க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்தன.

இதில் படுகாயம் அடைந்தவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றனர். இதில் 6 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் தடுப்பூசி போட்டு விட்டு வீட்டிற்கு சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் உச்சிசாமி கோவில் தெரு பகுதியில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு செல்கிறது.

தற்போது நாய்கள் கடித்ததில் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.