வெள்ளத்தில் சிக்கிய மக்கள் 
செய்திகள்

பீகாரில் கனமழையில் சிக்கி 20 பேர் பலி - பள்ளிகளுக்கு விடுமுறை

பீகாரில் பெய்து வரும் கனமழையில் சிக்கி 20 பேர் பலியாகினர். செவ்வாய்க்கிழமை வரை அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

பாட்னா:

பீகார் மாநிலத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் பாட்னாவில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், பீகாரின் பாகல்பூர் பகுதியில் மழையால் சேதமடைந்த சுவர் இடிந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். இதேபோல், காகல் பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மரம் விழுந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 3 நாட்களில் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி 20 பேர் பலியாகினர் என பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனமழை காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.