கரூர்:
கரூர் வெங்கமேடு புதுகுளத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 27). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபரிந்து வருகிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம் வீட்டின் அருகில் நின்று செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் அன்பழகனை கீழே தள்ளி விட்டனர். இதையடுத்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர். இதனால் கீழே விழுந்த அன்பழகனுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அன்பழகன் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் வாங்கப்பாளையம் பறகால் நிலையம் அருகே வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 23) , சரவணன் (21) என்பதும், அவர்கள் அன்பழகனிடம் இருந்து செல்போனை பறித்தும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.