பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அடுத்த குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி உத்திராஜ்(வயது34). அதே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(30).
இவர்கள் 2 பேரும் கோவை போத்தனூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் இருவரும் மது குடிக்க முடியாமல் தவித்து வந்தனர்.
இதற்கிடையே கம்பெனியில் ஆல்கஹால் சிறிதளவு கலந்த கெமிக்கலை எடுத்து குடிக்கலாம் என நினைத்தனர்.
அதன்படி சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் கம்பெனியில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினர். அப்போது யாருக்கும் தெரியாமல் அங்கிருந்த கெமிக்கலை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றனர்.
பின்னர் அதில் தண்ணீரை சேர்த்து குடித்துள்ளனர். வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் அவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வயிறு வலியால் அலறி துடித்த அவர்களை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.