சென்னை:
சென்னை ஜாம்பஜாரில் மார்க்கெட் முரளி என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜாம்பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் புல்லட் குமரன் என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவரது மனைவி மற்றும் மகன்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. மார்க்கெட் முரளி கொலை வழக்கில் மொத்தம் 7 பேர் குற்றவாளிகள்.
இதில் புல்லட் குமரன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மகனை முன்ஜாமீன் வாங்கி விட்டார். மகன்கள் விக்னேஷ்குமார், விஷ்ணுகுமார் இருவரும் தப்பி ஓடி தலைமறைவானார்கள். போலீசில் சிக்காமல் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவரையும் பிடிக்க போலீசார் முடுக்கி விடப்பட்டனர்.
இதனை தொடர்ந்து விக்னேஷ்குமாரும், விஷ்ணு குமாரும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்கும் போலீசார் நடவடிக்கை மேற் கொண்டிருந்தனர். இது தொடர்பாக விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடமும் தெரிவித்து அவர்களை உஷார்படுத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் விக்னேஷ் குமார், சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டார். இதனை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்து அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் ஜாம்பஜார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று விக்னேஷ்குமாரை கைது செய்து அழைத்து வந்தனர். ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விக்னேஷ்குமார் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.