நவ்சாரி:
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண், அவரது சகோதரியான சிறுமி ஆகிய இருவரை கற்பழித்த சாமியாரும், அவரது உதவியாளர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
விஷ்ணு நாயக் என்ற அந்த சாமியார், மராட்டிய மாநிலம் நந்தர்பார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரை தனது குடும்பப் பிரச்சனைகளைத் தீர்க்குமாறு, குஜராத் கன்டேவி நகரத்தைச் சார்ந்த 2 பெண்களின் தந்தை அணுகியுள்ளார்.
அப்போது, அவரது 2 மகள்களுக்கும் பேய் பிடித்திருப்பதால்தான் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகிறது என்றும், அவர்களுக்கு பேய் ஓட்டும் சடங்குகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சாமியார் விஷ்ணு நாயக் கூறியுள்ளார். பேய் ஓட்டுவதற்காக அவர் ரூ.50 ஆயிரமும் வசூலித்துள்ளார்.
பேய் ஓட்டுவதற்காக குஜராத் பெண்களை அவர்களது தந்தை, சாமியாரின் இருப்பிடத்தில் விட்டுச் சென்றுள்ளார். அப்பெண்களை சாமியார் பலமுறை கற்பழித்துள்ளார். இரண்டு மாதம் கழிந்த நிலையில், பெண்கள் இருவரும் கர்ப்பமடைந்தது அவர்களது குடும்பத்துக்கு தெரியவர, அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக பெண்களின் தந்தை அளித்த புகாரின் பேரில், கன்டேவி போலீசார், சாமியாரையும், அவரது உதவியாளர்கள் 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.