கைது 
செய்திகள்

வல்லம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது - தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு

வல்லம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது செய்த போலீசார் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து தப்பி ஓடிய மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

வல்லம்:

வல்லம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் திருச்சி சாலையில் வாகன சோதனையும், கண்காணிப்புபணியும் மேற்கொண்டனர். அப்போது தஞ்சை -திருச்சி சாலை வல்லம் பைபாஸ் பாலம் அருகே வந்த ஒரு லோடு ஆட்டோவை வழி மறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் மணல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லோடு ஆட்டோவில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் வல்லம் அருகே உள்ள ஆலக்குடியை சேர்ந்த குணசேகரன் (வயது 50), புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பாச்சூரை சேர்ந்த சரவணன்(39) என்பதும், அவர்கள் லோடு ஆட்டோவில் மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தி வந்த குணசேகரன் , சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல் வல்லம் ஆலக்குடி சாலையில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றுப்பாலம் அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டதில் அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மறித்தனர். இதை பார்த்த அதில் இருந்த 2 பேர் லோடு ஆட்டோவை சாலையிலேயே நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடி விட்டனர். இதை தொடர்ந்து அந்த லோடு ஆட்டோவை சோதனை செய்ததில் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT