சென்னை:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை தமிழகத்தில் தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
விமான நிலையங்கள், துறைமுகம் வழியாக பரவாமல் தடுக்க பயணிகளுக்கு தீவிர மருத்துவ சோதனை நடத்தப்படுகிறது. அதனைத்தொடர்ந்து வீடுகளுக்கு செல்லும் அவர்களை தீவிரமாக மருத்துவ ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்க்ள்.
தமிழகத்தில் இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் தொடர் கண்காணிப்பில் வெளிநாட்டு பயணிகளும் தமிழகத்தை சேர்ந்தவர்களும் இருந்து வருகிறார்கள். ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, திருவாரூர், விழுப்புரம், கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் 7 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சீனா மற்றும் பிற நாடுகளில் இருந்து வந்த இவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதுவரையில் பரிசோசதனை முடிவில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று இரவு 2 மருத்துவ மாணவிகள் தீடீர் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டனர். ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த லாவன்யா (28), சவுந்தர்யா (25) ஆகிய இருவரும் சகோதரிகள்.
சீனாவில் மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவர்கள் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் அவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தனர்.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர்களுக்கு நேற்று காய்ச்சல் பாதிப்பு வந்ததையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கிண்டி கிங் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு வார்டில் டாக்டர்களின் கண்காணிப்பில் அவர்கள் இருந்து வருகின்றனர்.
இது தவிர சீனாவைச் சேர்ந்த 2 பேரும் அங்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டவர்கள் என்று ஸ்டாலின் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அனைத்து அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளிலும் இதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டு நோயாளிகள் கண்காணிக்கப்படுகிறார்கள்.