செய்திகள்

செய்யாறு அருகே ரூ.2¼ லட்சம் கையாடல் செய்த பெண் தபால் ஊழியர், கணவருடன் கைது

செய்யாறு அருகே ரூ.2¼ லட்சம் கையாடல் செய்தது தொடர்பாக பெண் தபால் ஊழியர், கணவருடன் கைது செய்யப்பட்டார்.

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வாழப்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 31). இவரது மனைவி துர்கா (22). செய்யாறு அடுத்த பிரம்மதேசம் தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், பிரம்ம தேசம் தபால் நிலையத்தில் பணம் கையாடல் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, ராணிப்பேட்டை உட்கோட்ட உதவி அஞ்சலக கண்காணிப்பாளர் மணிகண்டன், விசாரணை நடத்தி வந்தார்.

பிரம்மதேசம் தபால் நிலையத்தில் கடந்த ஜூன் 22-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி வரையிலான கோப்புகளை அவர் தணிக்கை செய்தார். அப்போது, ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 500 பணம் கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், பெண் தபால் ஊழியர் துர்கா, அவரது கணவர் பாபுவுடன் சேர்ந்து பணத்தை கையாடல் செய்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து, உதவி அஞ்சலக கண்காணிப்பாளர் மணி கண்டன், பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் வழக்குப்பதிந்து பெண் தபால் ஊழியர் துர்கா மற்றும் அவருடைய கணவரை கைது செய்தனர். மனைவியின் தபால் அலுவலக பணிகளை பாபு செய்துள்ளார்.

அப்போது, கணவன், மனைவி 2 பேரும் சேர்ந்து பணத்தை சுருட்டி கைவரிசை காட்டியுள்ளனர்.