ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஹண்டர்பல் மாவட்டம் நுகர் பகுதியை சேர்ந்த ஒரு பாஜக நிர்வாகிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த பாஜக நிர்வாகியை குறிவைத்து நேற்று இரவு 10 மணியளவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பாஜக நிர்வாகி உயிர் தப்பிய நிலையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முகமது அல்டப் என்ற போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படையினர் காயமடைந்த போலீஸ்காரரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை குறிவைத்து பதிலடி தாக்குதல் கொடுத்தனர்.
பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலில் 1 பயங்கரவாதி கொல்லப்பட்டான். ஆனால், பயங்கரவாதிகளின் தாக்குதலில் படுகாயமடைந்த போலீஸ்காரரான முகமது அல்டபும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்து நுகர் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.