மேலூர்:
மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. குறிப்பாக உசிலம்பட்டி, பேரையூர், திருமங்கலம், மேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இளைஞர்களை குறிவைத்து சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். போலீசாரும் நடவடிக்கை எடுத்தும் பயனில்லை.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள பர்மா காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மேலூர் போலீஸ் டி.எஸ்.பி. சக்கரவர்த்தி தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த சிங்கராஜ் (வயது 28), புதுசுக்காம்பட்டியை சேர்ந்த பார்த்திபன் (26) ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை சோதனை செய்ததில் சிறு, சிறு பொட்டலங்களாக 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து கஞ்சாவையும், 3 செல்போன்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.