ரசாயன வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் 
செய்திகள்

ஆந்திராவில் மருந்து கம்பெனியில் ரசாயன வாயுக்கசிவு- 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் ரசாயன வாயு கசிந்ததால் 2 பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

விசாகப்பட்டினம்:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பரவாடா பகுதியில் உள்ள மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியில் நேற்று இரவு திடீரென ரசாயன வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். எனினும் சிலர் ரசாயன வாயுவை சுவாசித்ததால் மயங்கி விழுந்தனர்.

இதில் 2 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வாயுக்கசிவு ஏற்பட்டபோது அந்த பகுதியில் 30 பேர் வரை பணியில் இருந்ததாக தெரிகிறது. கம்பெனியின் மற்ற இடங்களுக்கு வாயு பரவாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கம்பெனி மூடப்பட்டது. இந்த விபத்து குறித்து பரவாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

விபத்து குறித்து கேள்விப்பட்டதும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்தார்.