கோப்பு படம் 
செய்திகள்

அமெரிக்கா: இரவு கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி

அமெரிக்காவில் இரவு கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

வாஷிங்டன்:

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணம் கிரீன்வேலி பகுதியில் லவிஸ் லோங்க் என்ற இரவு நேர கேளிக்கை விடுதி அமைந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரவு விடுதிகள் செயல்பட அனுமதி இல்லாத போதும் விதிகளை மீறி அந்த விடுதி நேற்று இரவு செயல்பட்டது.

அந்த கேளிக்கை விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை 100-க்கும் அதிகமானோர் கண்டுகளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த வாடிக்கையாளர்களில் இரு குழுவினருக்கு இடையே திடீரென மோதல் வெடித்தது.

இந்த மோதலின் போது ஒரு குழுவை சேர்ந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினார்.

அந்த நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் கேளிக்கை விடுதி பாதுகாவலர், ஒரு பெண் என மொத்தம் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தாக்குதல் நடத்திய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.