உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் சாலையில் உள்ள தருவைகுளம் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த மழைநீரானது வீணாக மணப்பாடு கடலில் கலக்கிறது.
மேலும் தருவைகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கை வெள்ளம் சூழ்ந்தது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் மதுபிரியர்கள் டாஸ்மாக் கடைக்கு கூட்டம் கூட்டமாக வந்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவித்து அறிவித்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. இன்றும் காலை முதல் உடன்குடி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, தண்டுபத்து, செட்டியாபத்து, பரமன்குறிச்சி, தாண்டவன்காடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.