செய்திகள்

உச்சிப்புளி அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்த 196 கிலோ கஞ்சா பறிமுதல்

உச்சிப்புளி அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 196 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பதுக்கியவர்களை தேடி வருகின்றனர். #cannabis

பனைக்குளம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, புகையிலை பொருட்கள், தங்கம் கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவுப்படி கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக உச்சிப்புளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அந்தப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 98 பண்டல்களில் தலா 2 கிலோ வீதம் 196 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை பறிமுதல் செய்த போலீசார் தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. #cannabis

SCROLL FOR NEXT