சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இதேபோல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தரப்பிலும் இணைப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது கவர்னர் வித்யாசாகர்ராவ் 18-ந்தேதி (இன்று) சென்னை வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை 20-ந்தேதிக்கு கோர்ட்டு தள்ளிவைத்தது. அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்தது.
இதற்கிடையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் உடனடியாக வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.