சென்னை:
ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.
அப்போது, செம்பியத்தை சேர்ந்த வக்கீல் குமாஸ்தா தேவராஜன் ஆஜராகி, ‘டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீண்ட காலமாக விசாரிக்கப்பட்டது. பின்னர் தீர்ப்புக்காக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. அதனால், அந்த தொகுதிகள் எல்லாம் எம்.எல்.ஏ.க்கள் இல்லாமல் காலியாக உள்ளன.
எனவே, இந்த வழக்கின் தீர்ப்பை விரைவாக பிறப்பிக்க வேண்டும் அல்லது அந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு நீதிபதிகள், ‘18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரித்துள்ளோம். தீர்ப்பை விரைவில் வழங்குவோம். இதில் ஏதாவது உங்களுக்கு கோரிக்கை இருந்தால், வழக்காக தாக்கல் செய்யுங்கள்’ என்று கூறி அவரது கோரிக்கையை நிராகரித்தனர். பின்னர் வேறு வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள். #tamilnews