ஆற்காடு:
வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கட்சி வளர்ச்சி சம்பந்தமான சந்திப்பு மற்றும் ஆய்வு கூட்டம் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் இரு வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ள 3-வது நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும்.
தகுதி நீக்கத்தால் 18 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை, வாக்களித்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும்.
அ.தி.மு.க. இருவேறு அணிகளாக இருப்பதாலும், தோல்வி பயத்தாலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயங்குகிறது. வருகிற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தோற்பது உறுதி. இப்போது நடைபெறும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு.
மக்கள் ஜெயலலிதாவுக்குதான் வாக்களித்தார்கள். எடப்பாடி பழனிசாமிக்கோ, பன்னீர்செல்வத்துக்கோ அல்ல. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக உள்ளது.
மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தமிழக அரசை பின்னால் இருந்து இயக்குகிறது. தமிழகத்தில் எங்கு தீவிரவாதம் உள்ளது என்பதை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெளிவாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மத்திய அரசே நடவடிக்கை எடுக்கலாம்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை யார் வேண்டுமானலும் சந்திக்கலாம். நடிகர் கமல்ஹாசன் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார். அவர் மரியாதை நிமித்தமாக ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். இருவரும் அரசியல் நிலவரம் குறித்து பேசினார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #thirunavukarasar