புதுடெல்லி:
கடல் கொள்ளை என்பதைக் கடலில் நடத்தப்படும் ஒரு கொள்ளை என்றோ குற்றச்செயல் என்றோ கூறலாம். குற்றம் புரிந்த கடற்கொள்ளையர்கள் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு ராணுவ விதிகளின்படி தண்டிக்கப்பட்டனர். ஆனால், 21ஆம் நூற்றாண்டில், பன்னாட்டுச் சமூகம் கடற்கொள்ளையர்களைச் சட்டத்தின் முன் கொண்டுவருவதில் பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. உலகின் பல்வேறு நாட்டு கப்பல்களை கடற்கொள்ளையர்கள் சிறை பிடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
கடந்த டிசம்பர் 3ம் தேதி நைஜீரியா நாட்டின் பொன்னி தீவின் அருகே ஹாங்காங் கொடியுடன் சென்ற கப்பல் ஒன்றை கடற்கொள்ளையர்கள் கைப்பற்றினர். மொத்தம் 19 ஊழியர்கள் கொண்ட அந்த கப்பலில் 18 பேர் இந்தியர்கள் ஆவர். கப்பலை கைப்பற்றிய கடற்கொள்ளையர்கள் கப்பலின் ஊழியர்களை கடத்திச் சென்றதாக கூறப்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்கும் முயற்சியில் நைஜீரிய அரசும், அந்நாட்டு கடற்படையும் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில், கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட 18 இந்தியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நைஜீரியா நாட்டின் அண்டை நாடான பெனின் நாட்டு கடல்பகுதியில் நார்வே நாட்டைச் சேர்ந்த எம்.வி.பொனிட்டா கப்பலின் ஊழியர்கள் 9 பேரை கடற்கொள்ளையர்கள் சிறை பிடித்தது குறிப்பிடத்தக்கது.