கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பணியில் காவலர்கள் கோப்புப்படம் 
செய்திகள்

சென்னையில் ஊரடங்கை மீறியதாக 17,865 வழக்குகள் பதிவு - காவல்துறை

சென்னையில் கடந்த 4 நாட்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 17,865 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில்தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஆனால் தற்போது மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது..

இந்நிலையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளைமுதல் 30-ம்தேதி வரை சில தளர்வுகளுடன் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் சென்னையில் கடந்த 4 நாட்களில்  144 தடை உத்தரவை  மீறியதாக 17,865 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னையில் ஊரடங்கு விதிகளை  மீறி வெளியே சுற்றிய நபர்கள் கடந்த 4 நாட்களில் 16,043 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மாஸ்க் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாத வகையில் 7,524 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.