செய்திகள்

அமர்நாத் யாத்திரை: இன்று 1786 யாத்ரீகர்கள் கொண்ட குழு பயணம்

அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றியுள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக இன்று 1786 யாத்ரீகர்கள் ஜம்முவில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

மாலை மலர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். 40 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும். அவ்வகையில் இந்த ஆண்டின் யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 2,280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர். பாகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து இந்த யாத்திரை தொடங்கும்.

இதுவரை 5 குழுக்கள் சென்றுள்ள நிலையில், இன்று 1786 யாத்ரீகர்கள் கொண்ட குழுவினர் ஜம்முவில் இருந்து புறப்பட்டனர். 53 வாகனங்களில் புறப்பட்டு சென்றுள்ள இவர்கள் இன்று மாலை பல்தல் மற்றும் பாகல்காம் அடிவார முகாம்களை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாத்திரை சீசன் தொடங்கியதில் இருந்து இதுவரை 17,146 பக்தர்கள் மற்றும் சாதுக்கள் அமர்நாத் புறப்பட்டுச் சென்றுள்ளனர். நேற்று 15813 பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 62,608 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.