புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, மொத்த பாதிப்பு 67,57,132 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,04,555 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57,44,694 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 85 சதவீதத்தை தாண்டி உள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம், தேசிய சராசரியான 85 சதவீதத்தை விட 17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அதிகமாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், டெல்லி, அரியானா மாநிலங்களில் குணமடையும் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதேபோல் தேசிய அளவில் புதிதாக குணமடைவர்களில் 75 சதவீதம் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, உத்தர பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.