சிறுமி திருமணம் நிறுத்தம் 
செய்திகள்

மூங்கில்துறைப்பட்டு அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே 16 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

மூங்கில்துறைப்பட்டு:

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனுர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கும் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் 21-ந் தேதி (அதாவது இன்று) திருமணம் செய்து வைக்க இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இதுபற்றி அறிந்த சங்கராபுரம் சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் வடபொன்பரப்பி போலீசார் ரங்கப்பனூர் பகுதிக்கு சென்றனர். அங்கு சிறுமியின் பெற்றோரிடம், 18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

மேலும் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுமியின் பெற்றோரிடம் கூறிவிட்டு, அவர்களிடம் திருமணத்தை நடத்தக்கூடாது என எழுதி வாங்கிவிட்டு சென்றனர்.