சென்னை:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் ஜெயஸ்ரீ (15) வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே இருந்து தீப்புகை வந்தது.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உடலில் நெருப்புடன் ஜெயஸ்ரீ எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்ட உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான முருகன், கலியபெருமாள் ஆகியோர் 15 நாள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டதால் விழுப்புரம் மாவட்டம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆவடியே சேர்ந்த சுமதி என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.