செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: நோட்டீஸ் அனுப்பிய 15 பேர் பதில் அனுப்பவில்லை

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தொடர்பாக 15 பேருக்கு நீதிபதி ஆறுமுகசாமி நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் நீதிபதி அனுப்பிய நோட்டீசுக்கு 15 பேரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

விசாரணை கமி‌ஷன் நடைபெறுவதற்காக அலுவலகம் சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள கலசமகாலில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்துக்கு கடந்த வாரம் நீதிபதி ஆறுமுகசாமி நேரில் வந்து பார்வையிட்டார்.

அப்போது விசாரணையை துவங்குவதற்காக 15 பேருக்கு நோட்டீசு அனுப்பினார்.

அது மட்டுமல்லாமல் ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் நவம்பர் 22-தேதிக்குள் தங்களிடம் உள்ள விவரங்களை பிரமாண பத்திரத்துடன் அனுப்பலாம் என்றும் அறிவித்து இருந்தார்.

இதன்படி இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் விசாரணைக்கு நேரில் வந்து சாட்சியம் அளிக்க தயாராக உள்ளதாக தபால் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் நீதிபதி அனுப்பிய நோட்டீசுக்கு 15 பேரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

இதனால் நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை மேலும் தாமதமாகும் என தெரிகிறது.

3 மாதத்தில் விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில் 37 நாட்கள் ஆகியும் இன்னும் விசாரணையே தொடங்கப்படவில்லை.

எனவே குறித்த காலத்துக்குள் விசாரணை முடிக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் முதல் அப்பல்லோ ஆஸ்பத்திரி வரை ஏராளமானோரிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் யார்-யாரை நீதபதி விசாரிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்கு உதவும் வகையில் சட்ட நிபுணர் குழுவும், மருத்துவ குழுவும் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.