ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அமர்நாத் யாத்திரை, மச்சாயில் மாதா யாத்திரை உள்ளிட்ட யாத்திரைகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும், ஜம்மு காஷ்மீரில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்தார். இதை தொடர்ந்து சுமார் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேறியுள்ளனர்.
இதற்கிடையே, காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் என 7 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரில் நிலவும் பதற்றம் தொடர்பாக டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உள்துறை செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், அங்கு நிலவும் பதற்றம் தொடர்பாக ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் இன்று மாலை அவசரமாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரிகள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில் ஸ்ரீநகர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலானது. மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.