மர்மநபர்கள் தாக்குதலில் தீப்பிடித்த காவல்துறை வாகனங்கள் 
செய்திகள்

மெக்சிகோவில் மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் - 14 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு

மெக்சிகோவில் மர்மநபர்கள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் 14 போலீஸ்காரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாலை மலர்

மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோ நாட்டின் மிசோகான் மாநிலத்தில் உள்ளது அகுயிலா நகர். இது போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அதிகம் உலவும் பகுதியாகும். போதைப்பொருள் கடத்தல் கும்பலை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அகுயிலா நகர் பகுதியில் நேற்று வழக்கம்போல் போலீசார் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இரு போலீஸ் வாகனங்களில் மொத்தம் 18 போலீசார் ரோந்து சென்றனர். அகுயிலா நகர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையோரம் மறைந்திருந்த மர்ம நபர்கள் காவல்துறை வாகனங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.  

உயர் ரக துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டதால் போலீஸ் வாகனங்கள் தீப்பிடித்து வெடித்தன. இதில் இரு வாகனங்களிலும் இருந்த 14 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் 4 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து மாநில ஆளுநர் சில்வானோ ஆரியோல்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘காவல்துறை மீதான இம்மாதிரியான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ளப் போவதில்லை, காவல்துறை மீது தாக்குதல் நடத்தியவர்களை தண்டிக்காமல் விடமாட்டோம்’ என்று கூறினார்.