செய்திகள்

சென்னையில் செல்போன் பேசியபடி பஸ் ஓட்டிய 14 டிரைவர்கள் சஸ்பெண்டு

சென்னையில் செல்போன் பேசியபடி பஸ் ஓட்டிய 14 டிரைவர்களை சஸ்பெண்டு செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மாலை மலர்

வாகனம் ஓட்டுபவர்கள் செல்போனில் பேசுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது குற்றம் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த 5 வருடங்களில் சென்னை மாநகர பஸ்களில் டிரைவர்கள் செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுவதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. 2014-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 370 புகார்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது புகார் உறுதி செய்யப்பட்ட 14 மாநகர பஸ் டிரைவர்கள், 3 கண்டக்டர்கள் மீது போக்குவரத்து துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் நடந்த விபத்துக்களின் அடிப்படையில் இந்த 17 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலை, ராயப்பேட்டை ஆஸ்பத்திரி, வேளச்சேரி சந்திப்பு ஆகிய இடங்களில் நடந்த மாநகர பஸ் விபத்துக்கள் டிரைவர்கள் செல்போனில் பேசியதால் அதிக விபத்துக்கள் ஏற்படுவது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள். பொதுமக்களும் புகார் செய்கிறார்கள். இதன் அடிப்படையில் விசாரணை செய்து மாநகர பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அதன் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.