செய்திகள்

லண்டனில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளுக்கு இறுதிசடங்கு நடத்த 130 முஸ்லிம் மத குருக்கள் மறுப்பு

லண்டன் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளின் உடல்களுக்கு இஸ்லாமிய முறைப்படி இறுதி சடங்குகள் மற்றும் பிராத்தனைகள் நடத்த 130 முஸ்லிம் மத குருக்கள் மறுத்துள்ளனர்.

மாலை மலர்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 3-ந் தேதி பாலத்தில் வேன் மூலம் மோதியும், பாரோ மார்க்கெட் அருகே பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதலும் நடத்தப்பட்டது. அதில் 7 பேர் உயிரிழ்ந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர்.

இத்தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர். இவர்களுக்கு உதவியதாக 7 பெண்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவர்களில் ஒருவன் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த குரம் பட் (27). மேலும் மொராக்கோ லிபியா பெற்றோருக்கு பிறந்த ரசித் ரெடோனே (30), இத்தாலியை சேர்ந்த யூசெப் ‌ஷகியா (22) ஆவார்.

லண்டனில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அங்கு வாழும் முஸ்லிம்கள். கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் மதகுருக்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளின் உடல்களுக்கு இஸ்லாமிய முறைப்படி இறுதி சடங்குகள் மற்றும் பிராத்தனைகள் நடத்தமாட்டோம்.

மற்ற இமாம்கள் (மதகுருக்கள்) அவர்களது உடல்களுக்கு இறுதி சடங்கு செய்ய கூடாது. ஏனெனில் அவர்கள் இஸ்லாம் போதித்த மேன்மைமிகு கருத்துக்களுக்கு முற்றிலும் எதிரானவர்கள்.

கிழக்கு லண்டன் பள்ளிவாசல் மற்றும் லண்டன் முஸ்லிம் மைய தலைவர் முகமது ஹபிபுர் - ரஹ்மான் கூறும்போது ‘எங்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு எதிராக நாங்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்து இருக்கிறோம். அப்பாவி மக்கள் மீது வேனை ஏற்றி கொலை செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

அதன் பின்னர் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வந்தவர்களும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.