மும்பை:
கற்பழிக்கப்பட்டதால் மும்பையை சேர்ந்த 13 வயது சிறுமி கர்ப்பமடைந்தாள். அவரது வயிற்றில் வளர்ந்த 32 வார கருவை கலைக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு சட்டப்போராட்டம் நடந்தது.
இந்த நிலையில் அந்த சிறுமிக்கு குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. மும்பை பைருல்லாவில் உள்ள ஜெ.ஜெ.ஆஸ்பத்திரியில் பிறந்த அக்குழந்தை 1.2 கிலோ எடை இருந்தது.
எனவே பிறந்த குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க சிறுமியும் அவரது குடும்பத்தினரும் முடிவு செய்து இருந்தனர்.
இதற்கிடையே, குறை பிரசவத்தில் பிறந்ததால் குழந்தையின் நுரையீரல் சரியாக வளர்ச்சி அடையாத நிலையில் பலவீனமாக இருந்தது. அதனால் பிறந்தது முதல் குழந்தைக்கு மூச்சு திணறல் இருந்து வந்தது.
எனவே அக்குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஆக்ஸிஜன் எந்திரம் மற்றும் ‘வென்டிலேட்டர்’ கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இருந்தும் பிறந்த 48 மணிநேரத்தில் அதாவது நேற்று காலை 10.30 மணியளவில் அக்குழந்தை பரிதாபமாக இறந்தது. அதை தொடர்ந்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.