செய்திகள்

ரெயில் கவிழ்ந்து 23 பயணிகள் பலி - ரெயில்வே ஊழியர்கள் 13 பேர் பணிநீக்கம்

முசாபர்நகர் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு கவிழ்ந்ததில் 23 பயணிகள் பலியானது தொடர்பாக ரெயில்வே ஊழியர்கள் 13 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே கடாலி என்ற இடத்தில் கடந்த 19-ந் தேதி கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு கவிழ்ந்ததில் 23 பயணிகள் பலி ஆனார்கள். இந்த விபத்தை தொடர்ந்து ஏற்கனவே 4 ரெயில்வே அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 3 அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே ஊழியர்கள் 13 பேர் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் 11 பேர் கேங்க்மேன் ஆவார்கள். ஒருவர் இளநிலை பொறியாளர் ஆவார். பணியில் கவனக்குறைவாக இருந்ததால் இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது. ரெயில்வே விதிமுறையின் கீழ், இவர்கள் தங்கள் தரப்பிலான கருத்துகளை 45 நாட்களுக்குள் தெரிவிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.