செய்திகள்

ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயிலால் 12 பேர் உயிர் இழப்பு

ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயில் கொடுமைக்கு மாநிலம் முழுவதும் 12 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

ஆந்திராவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்துகிறது. அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே வர முடியவில்லை.

இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். வீட்டுக்குள் வெப்ப காற்று வருவதால் மக்கள் தூங்க முடியவில்லை.

நேற்று அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டம் பாதிரி பேட்டில் 114.26 டிகிரி வெயில் பதிவானது

நெல்லூர் வெங்கடகிரியில் 113.36 டிகிரியும், சித்தூர் தொட்டம்பேடு, குண்டூர் மச்சவரத்தில் 113.18 டிகிரியும், கடப்பா மாவட்டத்தில் முட்டனூரில் 113 டிகிரியும் வெயில் கொளுத்தியது.

அதேபோல இந்திய வானிலை மையமும் வெப்ப காற்று குறித்து எச்சரித்து உள்ளது. 25-ந்தேதி முதல் ராயலசீமாவில் வெப்ப காற்று கடுமையாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளது.

காற்றில் ஈரப்பதம் குறைந்ததே வெப்ப காற்று கடுமையாக வீச காரணமாகும்.

இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.