கோப்பு படம் 
செய்திகள்

கடையம் அருகே அங்கன்வாடி பணியாளர் வீட்டில் 11 பவுன் நகை கொள்ளை

கடையம் அருகே அங்கன்வாடி பணியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடையம்:

கடையம் அருகே சிவசைலம் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயபால். இவர் மைக் செட் மற்றும் சவுண்டு சர்வீஸ் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராதா. அங்கன்வாடி பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராதா குடும்பத்தினருடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பீரோவில் இருந்த 3 சங்கிலிகள் உள்பட மொத்தம் 11 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வளவன், கடையம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT