நாமக்கல்:
நாமக்கல் அருகில் உள்ள சாலபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 31). கூலி தொழிலாளி. இவருடைய மகள் தன்ஷிகா ஸ்ரீ. இக்குழந்தை பிறந்து 11 மாதங்கள் தான் ஆகிறது.
இந்த நிலையில் குழந்தை தன்ஷிகா ஸ்ரீக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் குழந்தையை நாமக்கல் அரசு பொது மருத்துவமனையில் பெற்றோர் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் குழந்தைக்கு காய்ச்சல் குணமாகவில்லை.
இதனால் டாக்டர்கள் குழந்தைக்கு மர்ம காய்ச்சல் தொற்றியுள்ளதாகவும், குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஆகவே மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினார்கள்.
இதையடுத்து பெற்றோர் சேலம் அரசு மருத்துவ மனையில் குழந்தை தன்ஷிகா ஸ்ரீயை சேர்த்தனர். அங்கு இன்று காலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது மர்ம காயச்சலுக்கு நாமக்கல் மாவட்டத்தில் 11 மாத பெண் குழந்தை பலியாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.