கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவடைவதால் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து வருகின்றனர்.
ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு காலையிலேயே சென்று வாக்கை பதிவு செய்தனர்.
அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 10.6 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இதில் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர் நகர் தொகுதிக்கும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 222 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. #KarnatakaElections2018 #KarnatakaVoterTurnout