செய்திகள்

மெரினா, வண்டலூர் உள்பட சுற்றுலா தலங்களுக்கு செல்ல சென்னையில் 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்

மெரினா, வண்டலூர் உள்பட சுற்றுலா தலங்களுக்கு செல்ல சென்னையில் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் தற்போது, பள்ளி, கல்லூரிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு உறவினர்கள் வீடுகளுக்கும், சுற்றுலாவுக்கு என தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால், ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசலை தவிர்க்க, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற ஜூன் 30-ந்தேதி (சனிக்கிழமை) வரை 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா தலங்களுக்கும், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருத்தலங்களுக்கு செல்ல வசதியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, அண்ணா சதுக்கத்திற்கு மற்றும் அண்ணா சதுக்கம் வழியாக மொத்தம் 50 பஸ்களும், கோவளத்துக்கு 3 பஸ்களும், வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 20 பஸ்களும், மாமல்லபுரத்துக்கு 5 பஸ்களும், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு 8 பஸ்களும், திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலுக்கு 10 பஸ்களும், சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு 4 பஸ்களும் என மொத்தம் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.