நாகை:
ஊரடங்கு உத்தரவை மீறி பிரியாணி விருந்து சாப்பிட்டு ‘டிக்-டாக்’கில் வெளியிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என போலீசார் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.
இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே நடமாடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அரசின் உத்தரவை கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் நாகை மாவட்டம் மணல்மேடு அருகே வில்லியநல்லூர் கிராமத்தில் ஊரடங்கை மீறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் 30-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து அங்குள்ள மாரியம்மன் கோவில் பகுதிக்கு சென்று உள்ளனர்.
பின்னர் வாய்க்கால் மதகு அருகே சென்ற அவர்கள், பிரியாணி சமைத்துள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரும் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் அருகருகே அமர்ந்து விருந்து சாப்பிட்டுள்ளனர்.
இந்த காட்சியை அவர்கள் வீடியோ எடுத்து ‘டிக்-டாக்’ செயலி மூலமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வில்லியநல்லூர் பகுதியைச் சேர்ந்த கலைமணி(வயது 27), ராஜேஷ் (22), வெங்கடேஷ்(26), தினேஷ்(21) ஆகியோர் உள்பட 10 பேரை கைது செய்தனர்.
கைதானவர்கள் அனைவரும் போலீசார் முன்னிலையில், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம், சமூக விலகலை கடைப்பிடிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.