சுட்டுக்கொலை 
செய்திகள்

தெலுங்கானாவில் மாவோயிஸ்டு சுட்டுக்கொலை

தெலுங்கானாவில் மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் 5 மாவோயிஸ்டுகளை விசாரணைக்காக போலீசார் பிடித்துச் சென்றனர்.

மாலை மலர்

ஐதராபாத்:

தெலுங்கானா மற்றும் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம் ரேஸ்குட்ட அருகே உள்ள ஆலைகட்டா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர்.

இதில் மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த லிங்கன்னா என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் 5 மாவோயிஸ்டுகளை விசாரணைக்காக போலீசார் பிடித்துச் சென்றனர்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் போலீசார் பிடித்த 5 பேரையும் விடுவிக்க வேண்டும் எனக்கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட லிங்கன்னா உடலை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றபோது பொதுமக்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் பொதுமக்களை விரட்டியடிக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அதன் பிறகு லிங்கன்னா உடலை போலீசார் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து ஆலகட்டா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.