லக்னோ:
வட மாநிலங்களில் திருமண விழாவின் போது கொண்டாட்டத்திற்காக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மகிழ்ச்சியடையும் கலாச்சாரம் நிலவி வருகிறது. இத்தகைய கொண்டாட்டத்தின் போது தவறுதலாக துப்பாக்கி குண்டுகள் மற்றவர்கள் மீது பட்டு உயிர் இழக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. இதனால் இத்தகைய கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அம்மாநிலத்தின் பல்லியா மாவட்டத்தில் தெவால்பீர் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொண்டாடினர். அப்போது அருகிலிருந்த இசைக்குழுவினைச் சேர்ந்த ரகுநாத் ராம் என்பவர் மீது குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிகள் பயன்படுத்த உரிமம் வழங்கப்பட்டாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை மீறி பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறி வருகின்றனர்.