பெண்களும் விதிவிலக்கில்லை!சிங்கிள் கலாசாரம் இப்போது பெண்களிடமும் அதிகரித்து வருகிறது. 25 வயதை அடைந்துவிட்ட ஒரே காரணத்துக்காக திருமணம் செய்து கொள்ள பெண்கள் தயாராக இல்லை. ‘திருமணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. ஆண்களைப்போலவே குறிக்கோள்களும், எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளும் எங்களுக்கும் உண்டு’ என்கிற மனோபாவம் பெண்களிடம் அதிகமாகி வருகிறது என்கின்றன பல்வேறு ஆய்வுகள்.
பெண்கள் மற்றவர்களின் உதவியையும், ஆதரவையும் எதிர்பார்ப்பதும் குறைந்துவருகிறது. திருமணம் என்ற பெயரில் மற்றவர்கள் தங்கள் மேல் திணிக்கும் வாழ்க்கையைவிட, தாங்களாகவே தேர்ந்தெடுத்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு அதற்கு மதிப்பளிப்பதையே பெண்கள் விரும்புகிறார்கள். அதுதான் பெண்களின் சிங்கிள் வாழ்க்கைக்குக் காரணம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்குப் போவதற்கும், தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் சிங்கிள் வாழ்க்கைதான் சரி என்ற மனோபாவமே இதற்குக் காரணம். ஆனால், ஒருவருக்கொருவர் ஆதரவாக திருமணம் என்ற பந்தத்தில் வாழும் ஆத்மார்த்தமான, அர்த்தமுள்ள வாழ்க்கையை இவர்கள் இழக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.