ஆரோக்யம்

தினை என்ற சிறுதானியத்தின் பயன்கள்

தினையில் உடலுக்குத் தேவையான புரத சத்துகளும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இதில் உள்ள சத்துக்கள் என்னவென்று விரிவாக பார்க்கலாம்.

தினை உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகைகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தினை உற்பத்தியில் சீனா முதலிடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் கொண்டுள்ளது. பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் கி.மு.6,000 கால கட்டத்திலேயே சீனாவில் பயிரிடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது.

தற்பொழுதும் சீனாவின் வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்படும் தானியம் தினை தான். தினை இந்தியாவில் பயிராகும் ஒரு வகை உணவுப் பொருளாகும். தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு. தேனும், தினை மாவும் முருகனுக்கு பிடித்த உணவாக புராணங்களில் சொல்லப்படுகிறது. இது காய்ச்சலைப் போக்குகிறது. பசியை தூண்டி விடுகிறது.

நம் முன்னோர்களின் உணவுகளாக அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, தினை முதலியன இருந்தது. இதனால் அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் திடமாக இருந்தது. இன்று இவற்றின் உணவுப் பயன்பாடு குறைந்து கடைசியாக அரிசியையும் தவிடு நீக்கி, பாலீஷ் செய்து சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டோம். இதனால் இன்று உடல் வலுவிழந்ததோடு நோயின் பாதிப்புக்கும் ஆளாகிறது.